கடை வீதியில் குவிந்த மக்கள் கூட்டத்தால் திணறிய திருப்பூர்
By: Nagaraj Sat, 14 Nov 2020 2:57:04 PM
திணறியது திருப்பூர்... தீபாவளியை கொண்டாட வெளியூர் சென்றோர், பொருட்கள் வாங்க கடை வீதியில் குவிந்த மக்கள் கூட்டத்தால் திருப்பூர் நகரமே திணறியது.
பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனாவால், தொழில்துறை சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியது.கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில், அலுவல்கள், தொழில்கள் மெல்ல மூச்சு விடும் அளவு இயல்பு திரும்பியது.
பெரும் கேள்விக்குறியாக இருந்த தீபாவளி கொண்டாட்டமும் நெருங்கிய நிலையில் கடந்த ஒரு மாதமாகவே, பனியன் உற்பத்தி உள்ளிட்ட சார்பு தொழில்களும், வர்த்தகமும் சற்று மேலோங்கியது. அவ்வகையில், முந்தைய அளவு இல்லாத நிலையிலும் சற்று தீபாவளி களை கட்டியது. கடந்த சில நாட்களாகவே, தீபாவளி கொண்டாட, பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் கூடியது.
புத்தாடை, நகை, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என குறிப்பிடத்தக்க
அளவு பண்டிகை விற்பனை களை கட்டியது. இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில்
கடைசி நேர பர்ச்சேஸ் கூட்டம் திருப்பூர் நகரின் முக்கிய வீதிகள்,
தெருக்களில் பரவலாக இருந்தது.
குமரன் ரோடு, காமராஜ் ரோடு, அவிநாசி
ரோடு, பி.என். ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளிரோடு,
மங்கலம் ரோடு ஆகியவற்றில், ஆமை போல, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.