TNPSC Group 4 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியீடு
By: vaithegi Tue, 14 Feb 2023 7:35:56 PM
சென்னை: தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNPSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகி கொண்டே இருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து இது தொடர்பான அறிவிப்பில், இந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு மேற்கொண்டனர்.மேலும் இதில், 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதன்படி இந்த குரூப் 4 தேர்வு இந்திய அளவில் ஒப்பிடும் பொழுது மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என குறிப்பிட்டுள்ளது.
மேலும் தேர்வில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் 2 பகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையின்படி நடைபெற்றது. எனவே அதன்படி விடைத்தாள்கள் தற்போது தனித்தனியாக இரு முறை ஸ்கேன் செய்து பிழைகள் ஏதும் இருப்பின் அவை கணினி மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அதன் பின் அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். அதன்படி தற்போது 36 லட்சத்திற்கும் மேற்பட்ட OMR விடை தாள்களை சரிபார்க்க வேண்டியுள்ளது.
எனவே இத்தகைய காரணங்களாலும், மேலும் தற்போது பல பணித் தேர்வுகள் மற்றும் துறை தேர்வுகளை நடத்தி இதற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாலும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் எந்த வித தவறுமின்றி வெளியிடப்படும் என தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.