சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசிக்கப்படுகிறது; அமெரிக்க அறிவிப்பு
By: Nagaraj Tue, 07 July 2020 1:25:20 PM
சீனாவுக்கு அடுத்த "ஆப்பு"... டிக்டாக் உள்ளிட்ட சீன நாட்டின் செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் 15ம் தேதி இந்தியா – சீனா எல்லையான லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சீனா மீது இந்தியாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, டிக்-டாக் மற்றும் ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா பெரும் கவலை தெரிவித்தது.
அதோடு, டிக்டாக் தடையினால், அதன் தாய் நிறுவனத்திற்கு ரூ.45,000
கோடி வருமானம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவை தொடர்ந்து டிக்டாக் உள்பட சீன செயலிகளுக்கு தடை
விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
“இது
தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்ப்பிற்கு முன்னதாக நான் வெளியிட
விரும்பவில்லை. ஆனால், சீன செயலிகளை தடை விதிப்பது குறித்து நாங்கள்
ஆலோசித்து வருகிறோம்,” என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ
தெரிவித்துள்ளார்.
டிக்-டாக் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளது.