டாஸ்மாக் கடைகளை உடன் மூட வேண்டும்; தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்
By: Nagaraj Sun, 13 Dec 2020 8:39:19 PM
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இதில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை கொடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும். அ.தி.மு.க. அரசு 2016-ம் ஆண்டு தேர்தலில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறி இருந்தது. சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண் ஒருவர் குடித்துவிட்டு தகாத வார்த்தைகளை பேசியது சமூக வலைதளத்தில் பரவியது.
பெண்களும் இன்று குடிக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள
குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சரிசெய்து உயிரிழப்புகளை தடுக்க
வேண்டும்.
கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல்
பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.