அடுத்த வாரத்தில் உள்நாட்டு விமான சேவையை துவங்க ஆலோசனை
By: Nagaraj Tue, 12 May 2020 6:12:48 PM
விமான சேவையை துவங்க ஆலோசனை... இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அடுத்த வாரத்திற்குள் உள்நாட்டு விமான சேவையை படிப்படியாக துவங்குவது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலான ஊரடங்கு காரணமாக அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக விமானப் போக்குவரத்து மாறியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க விமான நிறுவனங்கள், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் உள்ளிட்டவற்றில் இறங்கியுள்ளது. இன்று முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை படிப்படியாக துவங்கும் சூழலில், அடுத்தக்கட்டமாக உள்நாட்டு விமான சேவை துவங்குவது குறித்து விமான நிறுவனங்கள், டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக மே 17ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.