தாயை பிரிந்து வாடும் குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஷாருக்கான்
By: Nagaraj Tue, 02 June 2020 6:59:41 PM
கடந்த வாரத்தில் அனைவரையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கிய ஒரு விஷயம் பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலைய நடைமேடையில் இறந்து கிடக்கும் தனது தாயை குழந்தை எழுப்ப முயற்சிக்கும் குழந்தைதான்.
இதுகுறித்த வீடியோ காட்சி காண்போரை கண்கலக்க வைத்தது. தாயின் மேல் கிடந்த போர்வைக்குள் புகுவதும், அதனை இழுத்து எழுப்ப முயற்சிப்பதுமாக அந்தக் குழந்தையின் செயல் மனவேதனையை ஏற்படுத்தியது. தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து மக்கள் வருத்தமடைந்தனர்.
இந்தக் காட்சிகளை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார். அவர் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீர் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. அந்தக் குழந்தை, இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயன்ற காட்சிகள் மனதைப் பிழிய வைத்தது. தற்போது தனது தாத்தாவின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம்' என குறிப்பிட்டுள்ளது.
தங்களை குழந்தையுடன் தொடர்பில் வைக்க உதவியவர்களுக்கு நடிகர் ஷாருக்கானும் நன்றி தெரிவித்துள்ளார். தாயை இழந்த இந்த துரதிருஷ்டமான சூழலில், குழந்தைக்கு மன வலிமை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். நமது அன்பைபும், ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
தாயை பிரிந்து வாடும் குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கானை பலரும் பாராட்டி வருகின்றனர்.