இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
By: vaithegi Thu, 03 Aug 2023 09:01:37 AM
சென்னை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி இன்று ஈரோடு மாவட்டத்திற்கு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காங்கேயம் வட்டம், பழைய கோட்டை கிராமம் ,மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து ஆங்கிலேய ஏகாபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளினை முன்னிட்டு இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் எனவும் இதற்கு ஈடாக வருகிற 26 -ம் தேதி சனிக்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் அத்துடன் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். இதனை அடுத்து இதற்கு ஈடாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக இயங்கும் என உத்தரவிட்டு உள்ளார்.