பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்
By: vaithegi Sun, 04 June 2023 2:10:50 PM
சென்னை:விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் .... இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் உள்ள 1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் வருகிற ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை மட்டும் 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.49 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
எனவே, மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in இணையதளங்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை வருகிற 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்து உள்ளது.