தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் 3 குழுவினருடன் இன்று பிரதமர் மோடி கலந்துரை
By: Karunakaran Mon, 30 Nov 2020 10:46:17 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 3 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. இதனால் விரைவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
அதன்பின், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுகிறார் என பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது.