தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது
By: vaithegi Sun, 30 July 2023 10:13:51 AM
சென்னை: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து கொண்டே வருகிறது. இதையடுத்து வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரையிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரையிலும் விற்கப்பட்டது.
இதற்கு இடையில் கடந்த சில நாட்களாகவே ஓரளவு விலை குறைந்து, கடந்த 24-ந் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் கடந்த 25-ந்தேதி கிலோவுக்கு ரூ.10-ம், 26-ம் தேதி கிலோவுக்கு ரூ.20-ம் அதிகரித்தது. தொடர்ந்து நேற்றைய தினம் (ஜூலை 29) மீண்டும் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து
மொத்த விற்பனையில் கிலோ ரூ.150க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து மொத்த விற்பனையில் 1 கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.