அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்
By: vaithegi Thu, 18 May 2023 3:28:43 PM
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதையடுத்து இந்த இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஏதுவாக தற்போது பள்ளிகளில் மாதிரி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன. எனவே இதனையொட்டி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து கொண்டு வருகின்றனர். இதுவரை மட்டும் 2 லட்சத்து 37,985 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வருகிற மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) வருகிற மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனவும், தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.