கடந்த 4 மாதத்தில் மொத்தம் ரூ.3154 கோடி வருவாய்; தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
By: Nagaraj Tue, 16 Aug 2022 10:54:40 AM
சென்னை: ரூ.3154 கோடி வருவாய்... ''கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, தேசியக் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின், பி.ஜி.மால்யா பேசியதாவது: பயணியருக்கான சேவைகள், சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில், ரயில்வே துறை தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2021 - 22ல் தெற்கு ரயில்வேக்கு 7,093 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை, 3,154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளது. கடந்த
ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 78 சதவீதம் அதிகம். ரயில்களை
தாமதம் இன்றி இயக்குவதில், தெற்கு ரயில்வே தற்போது இரண்டாவது இடத்தில்
இருக்கிறது. தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதைகளில் வேகம் அதிகரிப்பு,
வேகக் கட்டுப்பாடுகளை நீக்குவது, பணியாளர்கள் இல்லாத 'லெவல் கிராசிங்'
மற்றும் ரயில் வழித்தட மேம்பாலங்களில், 'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்
சிஸ்டம்' பொருத்தும் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்
பேசினார்.
சென்னை கோயம்பேடில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை
அலுவலகத்தில், அதன் நிர்வாக இயக்குனர் சித்திக், தேசியக் கொடி ஏற்றி
வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 52 பணியாளர்களுக்கு
பரிசுகளை வழங்கி பாராட்டினார். இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி,
டி.அர்ச்சுனன், பிரசன்னா குமார் பங்கேற்றனர்.