குற்றாலத்தில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
By: vaithegi Tue, 23 Aug 2022 10:52:02 AM
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எனவே இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வர தொடங்கியது.
இதை அடுத்து பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் அடித்தது. மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இதமான காற்று வீசியது. மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டரும், குண்டாறில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. சிவகிரியில் 9 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் நீர்வரத்து உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் மழை குறைந்ததால் இன்று காலை அருவிகளில் தண்ணீர் குறையத் தொடங்கியது. எனவே இதனால் இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.