ஒகேனக்கல்லில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்
By: vaithegi Sun, 18 Sept 2022 10:43:54 AM
பென்னாகரம்: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 28 ஆயிரம் கனஅடிநீர் வந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனை அடுத்து விடுமுறை தினம் என்பதால் இன்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்தனர்.
மேலும் மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். வழக்கத்தை விட இன்று கூட்டம் ஒகேனக்கல்லில் அதிகம் காணப்பட்டது.
மீன் விற்பனையும், களைகட்டியது. காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதி அளிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காவிரி கரையோரம் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் போலீசார், வருவாய்த்துறையினர் காவிரி கரையோரம் மிக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.