மதுரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து மாற்றம்
By: vaithegi Thu, 16 Mar 2023 6:33:02 PM
மதுரை: தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றான மதுரையில் தற்போது வாகன பயன்பாடு உயர்ந்துள்ளதால் காலை, இரவு என்று அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இப்போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோரிப்பாளையம் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை தற்போது அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இந்த பகுதியை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.
இதையடுத்து அதன் தொடர்ச்சியாக, தற்போது சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மேலமடை, ஆவின் நகர், மாட்டுத்தாவணி, கே கே நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய திருவள்ளுவர் சாலையை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கே.கே.நகர், ஆவின் நகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களிலிருந்து, அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம் செல்ல ஆவின் நகர் சாலை வழியாக சினிப்ரியா திரையரங்கம் பக்கத்தில் இருக்கும் சாலையை ஒருவழி பாதையாக மாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம் பகுதிகளுக்கு செல்வதன் மூலமாக போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பதற்காக இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.