ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி
By: Monisha Fri, 22 May 2020 09:47:23 AM
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் அனைத்து துறை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்கள் பஸ் போக்குவரத்தை தொடங்கின.
இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி முடிவடைகிறது. எனவே, முதற்கட்டமாக ஜூன் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆன்-லைனில் நேற்று முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்திலே 1.5 லட்சம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
இதைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும்.
டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.