கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சியுடன் கைகோர்த்த திருநங்கைகள்
By: Monisha Sat, 27 June 2020 10:13:50 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இதுவரை 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வேகமாக பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகிறது. இந்த தொண்டு நிறுவன தன்னார்வர்லர்கள் மூலம் குடிசைப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள், வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திருநங்கைகளும் மாநகராட்சியுடன் கைகோர்த்து உள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்பட கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால், பரிசோதனை செய்வதற்கும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்கவும் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். திருநங்கைகள் தினந்தோறும் 300 வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.