முழு ஊரடங்கு தினத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த திருச்சி டிஐஜி
By: Nagaraj Sun, 05 July 2020 8:02:00 PM
சைக்கிளில் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளார் டிஐஜி ஆனி விஜயா. இது போலீசார் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் முழு ஊரடங்கை டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி சரக டிஐஜி-யாக ஆனி விஜயா இரண்டு நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். திருச்சி சரகத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. பொறுப்பேற்ற உடனேயே திருச்சி சரகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரைப் பயன்படுத்த தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில்
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஆனி விஜயா சைக்கிளில் சென்றார். டிராக்
சூட் அணிந்து சாதாரணமாக அவர் சைக்கிளில் சென்றார். வருவது டிஐஜி என்று
தெரியாமல் காவலர்கள் தடுத்து விசாரித்துள்ளனர். வந்திருப்பது டிஐஜி என்று
தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அறிந்தார்.
தீவிர கண்காணிப்பில்
ஈடுபடும் படி உத்தரவிட்டார். திருச்சியில் 20 கி.மீ தூரத்துக்கு அவர்
சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார் திருச்சி மாவட்ட எல்லையான மாத்தூர்
வரை அவர் சைக்கிளிலேயே சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு என்று யாரும்
செல்லவில்லை. ஒரே ஒருவர் பைக்கில் அவரைத் தொடர்ந்து வந்தார். ஆனி விஜயா
சைக்கிளில் வந்து ஆய்வு செய்கிறார் என்ற தகவல் போலீசார் மட்டுமின்றி
மக்களையும் பரபரப்பில் ஆழ்த்தியது.