- வீடு›
- செய்திகள்›
- பிஎம் கேர்ஸ் குறித்து மத்திய அரசை சரமாரியாக விளாசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா
பிஎம் கேர்ஸ் குறித்து மத்திய அரசை சரமாரியாக விளாசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா
By: Karunakaran Tue, 22 Sept 2020 6:44:54 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் நன்கொடை வந்துள்ளது. இதனை கையாள பிஎம் கேர்ஸ் என்ற நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கணக்குகள் மத்திய தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நிதிகள் எப்படி செலவு செய்யப்படுகிறது என மக்கள் அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் மசோதா மீது கடந்த சனிக்கிழமை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது மேற்குவங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, பிஎம் கேர்ஸ் நிதிக்கு 38 பொதுத்துறை நிறுவனங்கள் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இவை பொதுமக்களின் பணம். இவை எப்படி மத்திய தணிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது?. சீன நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடை பெற்றுவருகிறோம். இது மிகவும் மோசமான செயல் என்று கூறினார்.
மேலும் அவர், நமது எதிரியிடம் இருந்து ஏன் பணத்தை பெற்றீர்கள்? பெற்ற பணத்தை திருப்பிக்கொடுக்காதது ஏன்? பிரதமர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், பிரத நிவாரண நிதி விவாதத்திற்கு அப்பார்பட்டது அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு தனி நபரின் பெயரைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதன் தேவையும் என்ன? இது ஒரு ஜனநாயக நாடு. இது தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரமல்ல. பிரதமரின் நிதி என்ற பெயரிலேயே இது இந்திய அரசின் அதிகாரம் பெற்றது என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இது வரவில்லை. நீங்கள் வெளிப்படைத்தன்மை என்ற கூற்றிலிருந்து நீங்கள் ஓடுகிறீர்கள் என்று சரமாரியாக விளாசினார்.