அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
By: Karunakaran Sat, 20 June 2020 11:41:06 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் கடும் முயற்சி செய்து வருகிறார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் என டிரம்ப் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தொடர்ந்து கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் கடந்த 11ந் தேதி முதல் 15ந் தேதி வரை தேசிய அளவில் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கருத்துக்கணிப்பு முடிவில் டிரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு தரமாக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதனால் டிரம்பை விட ஜோ பிடன் 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். கொரனோ வைரஸை கையாண்ட விதம், வேலை இழப்பு பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் டிரம்பின் தலைமைக்கு எதிராக 55 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால் இந்த முறை டிரம்ப் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.