கொரோனாவை தடுக்க முக கவசம் அவசியம் என ஆதரவு குரல் கொடுத்த டிரம்ப்
By: Karunakaran Fri, 03 July 2020 2:34:08 PM
கொரோனா வைரஸ் தொற்று பரவலிலிருந்து தற்காத்து கொள்ள முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த முக கவசம்தான் கொரோனாவுக்கு எதிரான உயிர் கவசமாக மாறி வருகிறது. உலகமெங்கும் 1 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்குமுக கவசம் அணிந்து கொள்ள பிடிக்கவில்லை. அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தபோதுகூட, நான் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறினார்.
அவரது மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப் கூட முக கவசத்தை அணிந்து கொண்டு பொதுவெளியில் வலம் வருகிறார். அவரது கட்சி தலைவர்களான துணை அதிபர் மைக் பென்ஸ், செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல், மூத்த எம்.பி. மிட் ரோம்னி, பெண் எம்.பி. லிஸ் செனே என பலரும் முக கவசம் அணிவதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் டிரம்ப் பேட்டி அளித்தபோது, அனைவரும் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். இதற்கு நான் ஆதரவானவன் என்று கூறினார். மக்களோடு ஒரு நெருக்கடியான தருணத்தில் இருந்தால், நிச்சயமாக அணிவேன். பொதுவெளியில் முக கவசம் அணிவதில் எனக்கு பிரச்சினை இல்லை என்று டிரம்ப் கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.