சிரியா, லிபிய நாட்டின் கிளர்ச்சியாளர்களை அசர்பைஜானுக்கு ஆதரவாக களமிறக்கிய துருக்கி
By: Karunakaran Thu, 01 Oct 2020 4:19:54 PM
அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளும் இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்து சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது. இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.
பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது. அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 4-வது நாளாக சண்டை நீடித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சண்டையில் நகோர்னோ-கராபத் தன்னாட்சி மாகாணத்தின் படையினரே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்து வருகிறது. பாகிஸ்தானும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகிறது. இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்யவேண்டும் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் துருக்கிக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், பிரான்சும் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.