- வீடு›
- செய்திகள்›
- லடாக் குறித்த சர்ச்சை விவகாரத்தில் டுவிட்டர் அளித்த விளக்கம் போதுமானதல்ல - பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கண்டனம்
லடாக் குறித்த சர்ச்சை விவகாரத்தில் டுவிட்டர் அளித்த விளக்கம் போதுமானதல்ல - பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கண்டனம்
By: Karunakaran Thu, 29 Oct 2020 1:26:25 PM
சமீபத்தில் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் பல தலைவர்களும், எதிர்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று பாராளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தனர். அப்போது, இந்தியாவின் உணர்வுகளுக்கு டுவிட்டர் நிறுவனம் மதிப்பளிப்பதாக அந்த பிரதிநிதிகள் கூறினர்.
ஆனால் இது இந்தியாவின் உணர்வு மட்டுமின்றி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு சார்ந்தது என குழு தலைவர் மீனாட்சி லெகி கூறினார். மேலும் இது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றம் எனவும் அவர் தெரிவித்தார். இது பெரும் விவாதமாக தற்போது மாறியுள்ளது.