- வீடு›
- செய்திகள்›
- அமெரிக்காவில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது 17 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறப்பு
அமெரிக்காவில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது 17 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறப்பு
By: Karunakaran Thu, 27 Aug 2020 1:04:15 PM
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டபோது, அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.
அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன. ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் அமெரிக்கவின் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்த போது, பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்து பின்னாலிருந்து துப்பாக்கியால் பல முறை சுட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயங்களுடன் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட அண்டிஜோ பகுதியை சேர்ந்த கெலி ரிட்டின்ஹவுஸ் என்ற 17 வயது இளைஞனை கைது செய்தனர். விசாரணையில், கெலி ரிட்டின்ஹவுஸ் போலீசாரின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.