அமெரிக்காவில் இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு
By: Karunakaran Mon, 06 July 2020 09:50:57 AM
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் கிரீன்வேலி பகுதியில் அமைந்துள்ள லவிஸ் லோங்க் என்ற இரவு நேர கேளிக்கை விடுதி கொரோனா வைரஸ் காரணமாக செயல்பட அனுமதிகொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த இரவு நேர கேளிக்கை விடுதி அனுமதி இல்லாமல் விதிகளை மீறி நேற்று இரவு செயல்பட்டது.
100-க்கும் அதிகமானோர் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை கண்டனர். அப்போது அங்கு இருந்த வாடிக்கையாளர்களில் இரு குழுவினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு ஒரு குழுவை சேர்ந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கேளிக்கை விடுதி பாதுகாவலர், ஒரு பெண் என மொத்தம் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இந்த தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் அனுமதியின்றி கேளிக்கை விடுதி நடத்திய அதன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.