நீதித்துறை விவகாரங்களில் ஐநா தலையிடுகிறது... மத்திய அரசு குற்றச்சாட்டு
By: Nagaraj Wed, 29 June 2022 5:21:31 PM
புதுடில்லி: தலையிடுகிறது ஐ.நா... இந்தியாவின் நீதித்துறை விவகாரங்களில் ஐநா தலையிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் காவல்துறை கைது செய்தனர். அவருடன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டார்.
தீஸ்தா செதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும்
தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் இந்த
கைது நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர்
கண்டனம் தெரிவித்ததுடன் அவரை விடுதலை செய்யவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்
ஐநாவின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஃசி
வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக
இந்திய நீதித்துறையின் அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும்
இத்தகைய நடவடிக்கைகளை சமூக செயற்பாட்டிற்கு எதிரான ஒடுக்குமுறை என
வகைப்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின்
நீதித்துறை செயல்பாடுகளில் ஐநா தலையிடுவதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய
வெளியுறவுத்துறை ஐநாவின் குற்றச்சாட்டு தேவையற்ற ஒன்று எனவும்
தெரிவித்துள்ளது.