சோனு சூட்டின் மனிதநேயத்தைப் பாராட்டும் விதமாக விருது வழங்கும் ஐ.நா!
By: Monisha Wed, 30 Sept 2020 4:39:03 PM
தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனான நடித்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தில் அழைத்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி டுவிட்டர் மூலமாக உதவிகள் கேட்கும் பலருக்கு அவர் தயங்காமல் உதவி செய்துள்ளார். மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு டிராக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பறி போய் விட்டதால் காய்கறி விற்பனை செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் பணி, உள்பட சோனுசூட் செய்த உதவிகளின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படி இவருடைய அடுக்கடுக்கான மனிதநேயச் செயல்கள் இந்திய அளவில் மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகப் பார்க்கப் பட்டது. மேலும் சில ஊடகங்கள் இவரைக் குறித்து ஏழைகளின் நாயகன் எனவும் பாராட்டு பத்திரங்களை வாசித்தன.
அந்த வகையில் தற்போது ஐ.நா அவை நடிகர் சோனு சூட்டிற்கு சிறப்பு விருதினை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக பல்வேறு வகைகளில் உதவிகளைப் புரிந்த சோனு சூட்டின் மனிதநேயத்தைப் பாரட்டும் விதமாக சஸ்டைபள் டெவலெப்மெண்ட் கோல்ஸ் என்ற விருதினை ஐ.நா வழங்க இருக்கிறது.
அதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சோனு சூட் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்று கூறியுள்ளார். கொரோனா நேரத்தில் மக்களுக்காக நின்ற சிலருக்கு இப்படியான சர்வதேச விருதுகள் அறிவிப்பதைக் குறித்து பலரும் ஐ.நா விற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.