- வீடு›
- செய்திகள்›
- ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றும் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது - இந்திய தூதர் திருமூர்த்தி
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றும் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது - இந்திய தூதர் திருமூர்த்தி
By: Karunakaran Sun, 20 Sept 2020 11:46:33 AM
ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. இந்த கூட்டம் ‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா. பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடக்கவுள்ளது.
இந்த கூட்டத்தில் அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன. இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துவார். கொரோனா காரணமாக ஐ.நா.வின் பொதுசபை கூட்டம், அதையொட்டிய அமர்வுகள், மாநாடுகள் அனைத்தும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது.
இதில் நேரடியாக எந்த நாடுகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. மாறாக அவர்களது உரைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, பொது சவை அரங்கில் ஒளிபரப்பப்படுகிறது. அதன்படி, பிரதமர் மோடியின் 2 உரைகளும் வீடியோ முறையில்தான் அங்கு ஒளிபரப்பப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில், ஐ.நா. பொது சபையில் பிரதமர் மோடியின் உரையும், திட்டமும் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நா. பொதுசபை தலைவரால் 30-ந்தேதி நடத்தப்படும் பருவநிலை மாற்ற மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உரையாற்றுகிறார். உலக பருவநிலை நடவடிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.