சீனாவின் மனித உரிமை மீறலுக்கு 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் அறிக்கை
By: Nagaraj Thu, 08 Oct 2020 09:15:47 AM
39 நாடுகள் கடும் கண்டனம்... சீனாவின் மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா.,வில், 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில், ஐ.நா., பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை ஐ.நா.,விற்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார்.
அதில் சீனா, சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, ஜிங்ஜியாங் மாகாணத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது உய்குர் கலாசாரத்தை திட்டமிட்டு
அழிக்கும் செயல். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டு, உய்குர் மற்றும் இதர சிறுபான்மையினரின் நடமாட்டங்கள்
கண்காணிக்கப்படுகின்றன. கட்டாயக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு,
கொத்தடிமைகளாக்குவது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஏராளமான
அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
திபெத்திலும் சிறுபான்மையினருக்கு
எதிராக, சீனா மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளது. கொரோனாவுக்கு சீனாவே
காரணம் என, போராட்டம் நடத்தியோர் மீதும் அடக்குமுறை கட்டவிழ்த்து
விடப்பட்டு உள்ளது. ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி,
மக்களின் பேச்சுரிமையை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.
இது,
பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இத்தகைய மனித
உரிமை மீறல்களை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜிங்ஜியாங் மாகாணத்தில்
உள்ள உய்குர் மக்களின் நிலையை நேரில் கண்டறிய, ஐ.நா., மனித உரிமைகள் குழு
தலைவர், மிச்சல் பேச்லட் தலைமையிலான குழுவிற்கு, சீனா அனுமதி அளிக்க
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை
வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை
பாகிஸ்தான் வெளியிட்டது. அதில், 'ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு
விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு
கண்டனம் தெரிவித்து உள்ளது.