இலங்கையின் நிலைமையை நேரில் கண்டறிய வரும் ஐ.நா. உலக உணவு திட்ட செயல் இயக்குனர்
By: Monisha Sun, 12 June 2022 4:22:25 PM
கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்தார். இதனையடுத்து, அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துள்ளது.
மேலும், டாலர் தட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதன் காரணமாக அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இதற்கு தீர்வு காண புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே பல்வேறு நடவடிக்கைளை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய வருமாறு அழைப்பு விடுத்தார்.
தற்போது இந்த அழைப்பை டேவிட் பீஸ்லேவும் ஏற்று, இலங்கைக்கு வர முன்வந்துள்ளார். இதுகுறித்த தகவலை ரணில் விக்ரமசிங்கே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உயிர் காக்கும் உதவிகள் வழங்குவதற்கு 47.2 மில்லியன் டாலர் நிதி வேண்டும் என்று கூறி நன்கொடைகளை ஐ.நா. சபை கோரியுள்ளது.