கட்டுக்குள் வராத கொரோனா வைரஸ் பரவல்: பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது
By: Monisha Wed, 20 May 2020 4:14:28 PM
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது கிட்டத்தட்ட உலக நாடுகளில் அனைத்திலும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெரும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலமே, கொரோனா நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கணிசமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,970,918- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 325,151 ஆக உள்ளது.