உலக சாதனைகள் நிகழ்த்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை... மத்திய அமைச்சர் பெருமிதம்
By: Nagaraj Sun, 19 June 2022 11:57:38 AM
புனே: மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நிகழாண்டில் 5 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக அமைச்சா் நிதின் கட்கரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மகாராஷ்டிரத்தின் புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சா் நிதின் கட்கரி, ‘‘அமைச்சகம் நிகழாண்டில் 5 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 75 கி.மீ. தொலைவுள்ள நெடுஞ்சாலையானது வெறும் 105 மணி நேரம் 33 நிமிஷங்களில் அமைக்கப்பட்டதும் அச்சாதனைகளில் ஒன்று. அமராவதி-அகோலா இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 53-இல் அச்சாலை அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாதனைப் பணிகளுக்கு பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள், ஆலோசகா்கள், பணியாளா்கள் ஆகியோரைக் கொண்ட ஒட்டுமொத்த குழுவே முக்கியக் காரணம். அவா்களே இரவுபகல் பாராது பணியாற்றி வருகின்றனா்.
இந்தியா தற்போது எரிசக்தியை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த
நிலையை மாற்றி எரிசக்தியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவைத்
திகழச் செய்ய வேண்டும். அதற்கு கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தியை
அதிகரிப்பது அவசியம்.
18-ஆவது நூற்றாண்டு முகலாயா்களுக்கானதாக
இருந்தது. 19-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பேரரசுக்கானதாகவும், 20-ஆம்
நூற்றாண்டு அமெரிக்காவுக்கானதாகவும் இருந்தது. நாட்டில் உள்ள அனைவரும்
ஒருங்கிணைந்து பணியாற்றினால், 21-ஆவது நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக
இருக்கும். நாடு பொருளாதார வலிமை கொண்டதாக மாறும்’’ என்றாா்.