ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவை நிராகரித்த ஐக்கிய ஜனதா தளம்
By: Nagaraj Fri, 27 Jan 2023 11:04:23 AM
பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் நிராகரிப்பு... காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தின் நிறைவு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்பதை ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிராகரித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 30ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் வரும் 30ம் தேதி நாகலாந்தில் எங்கள் கட்சியின் தேர்தல் பிரசார துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளோம்.
இதன் காரணமாக அன்றைய தினம் நடைபெற உள்ள இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த முடிவு காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.