உண்மைக்கு மாறான செய்திகள் வெளி வருகிறது; ஞானவேல் ராஜா விளக்க அறிக்கை
By: Nagaraj Sat, 25 July 2020 12:52:49 PM
தன் மீது உண்மைக்கு மாறான செய்திகள் வெளிவருவதாகக் கூறி ஞானவேல் ராஜா இப்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. கடந்த 2 தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்குவதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரிடம் ரூ.300 கோடி மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், இந்தப் பண மோசடியில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. ரூ.300 கோடி பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஆகஸ்ட் 7 - ம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இந்நிலையில் தன் மீது உண்மைக்கு மாறான செய்திகள் வெளிவருவதாகக் கூறி ஞானவேல் ராஜா இப்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சில
தொலைக்காட்சி சேனல்கள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்னைப்
பற்றி உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த செய்திகளில்
உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை
வெளியிடுகிறேன்.
தமிழ் திரையுலகிற்கு தேசிய விருது உள்பட பல
விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்ப
கலைஞர்களையும் தந்துள்ள எனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம்
தயாரிக்கப்பட்ட 'மகாமுனி' திரைப்படம் 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம்
தேதி ரிலீசானது. நீதிமணி என்பவர் 2019 மே மாதம் என்னை அணுகி 'மகாமுனி'
திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று
கூறினார் .
அவ்வகையில் 2019 மே 27-ம் தேதி, 6 கோடியே 25 லட்சம்
ரூபாய் தொகைக்கு நீதிமணி அவர்களின் 'தருண் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு
மகாமுனி திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது.
நீதிமணி பகுதி தொகையாக 2 கோடியே 30 லட்சம் மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள 3
கோடியே 95 லட்சத்தை பிறகு தருவதாக சொன்னார். இதுவரை தராமல் என்னை ஏமாற்றி
விட்டார், மீதமுள்ள தொகையை தர வேண்டிய நீதிமணி மீது சினிமாத்துறையின்
சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்
நீதிமணியும் அவரது கூட்டாளிகளும் 300 கோடி மோசடி செய்துவிட்டதாக துளசி
மணிகண்டன் என்பவர் புகார் அளித்துள்ளார். என்மீதோ, ஸ்டுடியோ கிரீன் மீதோ
எந்த புகாரும் அளிக்கவில்லை. ஒரு பொருளை வர்த்தகம் செய்யும் போது அதை
வாங்கும் நபர் என்ன செய்கிறார், அவரின் பின்னணி என்ன என்பதை நாம் ஆராய்ச்சி
செய்வதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.