நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கிக்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
By: Nagaraj Mon, 20 Feb 2023 10:55:58 PM
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி துருக்கி சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனிடையே துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் பல நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் நடைபெற்று 2 வாரம் நெருங்கி வரும் நிலையில் இன்றுடன் மீட்புபணிகளை நிறுத்த துருக்கி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் சென்றுள்ளார்.
அங்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு வருகிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.