- வீடு›
- செய்திகள்›
- ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்
ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்
By: Karunakaran Fri, 10 July 2020 10:52:48 AM
மஹாராஷ்ராவின் தலைநகர் மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக புறநகர் மின்சார ரெயில் சேவை விளங்குகிறது. இவை மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படுகிறது. இந்த மின்சார ரெயில் சேவைகளை மும்பை பெருநகர் பகுதிகளில் தினசரி சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய ஊழியர்களுக்காக மட்டும் இந்த மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மும்பையில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புறநகர் மின்சார ரெயில் வழித்தடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் மராட்டிய அரசு மற்றும் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம், சிட்கோ, மும்பை ரெயில் விகாஷ் கழகம் ஆகிய நிறுவனங்கள் இடையே ரூ.10 ஆயிரத்து 947 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும், ரூ.3 ஆயிரத்து 491 கோடி செலவில் புதிதாக 47 ஏ.சி. மின்சார ரெயில்கள் வாங்கப்பட உள்ளன.
ரூ.551 கோடி செலவில் பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை தடுப்பதற்கான கருவி வாங்கப்பட உள்ளது.புதிய திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான செலவுகளை ரெயில்வே அமைச்சகம் மற்றும் மராட்டிய அரசு பகிர்ந்துள்ளன. மேலும் இதற்காக ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ரூ.3,500 கோடி கடன் வழங்கவுள்ளது. இந்த கடனுக்கான ஒப்பந்தம் இந்த மாதத்திலேயே கையெழுத்திடப்படவுள்ளது.