வண்டலூர் பூங்கா மீன் அருங்காட்சியகம் 2 ஆண்டுகளுக்கு பின் திறப்பு
By: Nagaraj Sun, 11 Sept 2022 3:25:52 PM
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு வண்ண மீன்களை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பார்த்து ரசித்து வந்த மீன் அருங்காட்சியகத்தை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது.
இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியத்திற்கு
சென்று வண்ண மீன்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த சில
மாதங்களுக்கு முன்பு மீன் வடிவில் இருந்த மீன் அருங்காட்சியகம்
புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியகத்திற்குள் 28 வகையான வண்ண மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள் விடப்பட்டு வண்ண ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன.
2
ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீன் அருங்காட்சியகத்தை பார்வையிட
பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று பூங்காவுக்கு
வந்த பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியகத்திற்குள் சென்று அங்கு உள்ள
கண்ணாடி தொட்டிகளில் பராமரிக்கப்பட்ட வரும் விதவிதமான வண்ண மீன்களை
பார்த்து ரசித்தனர்.