பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
By: Karunakaran Tue, 01 Sept 2020 09:31:36 AM
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜி அனுபவம்வாய்ந்த தலைவர். நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்தார். அவரது பணிகள், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய விஷயம். அவரது மரணம், இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள செய்தியில், விடாமுயற்சியுடனும், உறுதிப்பாட்டுடனும் பல்வேறு பணிகளில் நாட்டுக்காக சேவை செய்தவர், பிரணாப் முகர்ஜி. ராஜதந்திரியாக திகழ்ந்தார். தனது அறிவுக்கூர்மையால் கட்சி வேறுபாடு கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எங்கள் மீது பாசப்பிணைப்புடன் இருந்தார். திறமையான நிர்வாகி. அரசியல் தீண்டாமையில் நம்பிக்கை இல்லாதவர். பல கட்சியினராலும் மதிக்கப்பட்டார். அவரது மறைவு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மிகுந்த துயரத்துடன் இதை எழுதுகிறேன். பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நம்மை விட்டு சென்று விட்டார். பல பத்தாண்டுகளாக அவர் தந்தை ஸ்தானத்தில் இருந்தார். அவர் இல்லாத டெல்லிக்கு செல்வதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவரை பெரிதும் இழந்து தவிக்கிறேன் என்று வெளியிட்டுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உயர்மட்ட குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜி, எல்லா கட்சிகளுடனும் நல்லுறவை கடைப்பிடித்தார். அதனால், தான்சார்ந்த அரசுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடியவராக திகழ்ந்தார் என்று கூறியுள்ளனர்.