மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம்...வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் தகவல்!
By: Monisha Fri, 04 Sept 2020 12:46:38 PM
எங்களுடைய தந்தை வழியில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பயணிப்போம் என்று வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.
மறைந்த வசந்தகுமார் எம்.பி. 7-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழித்துறையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் வசந்தகுமாரின் மகன்கள் நடிகர் விஜய் வசந்த், வினோத் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் நடிகர் விஜய் வசந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களுடைய தந்தை உழைப்பால் உயர்ந்தவர். அவருடைய உழைப்பை முன் உதாரணமாக கொண்டு அவர் செய்த பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.
அவர் கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பல திட்டங்களை செய்ய நினைத்து இருந்தார். அவருடைய மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுடைய தந்தை வழியில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம்.
அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இதுதொடர்பாக குடும்பத்துடன் பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.