வேல் யாத்திரை திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறும்
By: Monisha Mon, 16 Nov 2020 3:39:09 PM
தமிழக பா.ஜனதா சார்பில் நவம்பர் 6-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டனர். இந்த யாத்திரைக்கு கொரோனா பரவல் காரணமாக அரசு அனுமதியளிக்க வில்லை. இருப்பினும் தடையை மீறி திருத்தணியில் இருந்து கடந்த 6-ந்தேதி வேல் யாத்திரை தொடங்கியது. யாத்திரையில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்கு பிறகு நாளை (17-ந்தேதி) திருவண்ணாமலையில் இருந்து யாத்திரை தொடங்க வேண்டும். இந்தநிலையில் நேற்று முதல் 100 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியையும் அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் திட்டமிட்டபடி நாளை திருவண்ணாமலையில் இருந்து யாத்திரை தொடங்கும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
பா.ஜனதா தலைவர் முருகன் நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "வேல் யாத்திரை திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுவதற்காக எம்பெருமாளை வேண்டினேன்" என்றார்.
வேல் யாத்திரை அடுத்த மாதம் 6-ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக திட்டமிடப்பட்டது. இப்போது அது ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு 7-ந்தேதி நிறைவுநாள் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.