இன்று வெயில் சுட்டெரிக்கும்...வானிலை ஆய்வு மையம் தகவல்
By: Monisha Mon, 15 June 2020 09:32:42 AM
2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். அதே போல் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பருவகாற்று காரணமாகவும், மற்ற இடங்களில் வெப்பசலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதத்துடன் கூடிய காற்று குறைந்து, மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் தமிழகத்தின் வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் ஆரம்பமாக நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கடலூர், மதுரை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதேபோல் தான் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் இருக்கும்.
இதுதவிர, பருவகாற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வெப்பசலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.