பெண்ணின் வயிற்றில் இருந்து 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் வீடியோ வைரல்
By: Karunakaran Wed, 02 Sept 2020 11:14:07 AM
ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் எழுந்தபோது, அவரின் வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார்.
இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை கண்டறிந்தனர். இதனால் அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை அறிந்து வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி கருவியை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தியுள்ளனர்.
பெண் டாக்டர் ஒருவர் எண்டோஸ்கோபி கருவியுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் பிடித்து இழுத்தார். எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக வந்ததைப் பிடித்து இழுத்த டாக்டர், அது 4 அடி நீள பாம்பு என்பதை அறிந்து, பதறிப்போய் பின்வாங்கினார். இதனை சக டாக்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.
பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்கும் காட்சி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா? அந்த பெண்ணின் வயிற்றுக்குள் எவ்வளவு நேரம் பாம்பு இருந்தது? என எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அந்த கிராமத்தில் சகஜமானவை எனவும், திறந்தவெளியில் தூங்குவதை மக்கள் தவிர்க்குமாறு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.