வக்கீல் பீஸ் கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் விஜய் மல்லையா
By: Karunakaran Sun, 13 Dec 2020 6:10:33 PM
கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டன் தப்பி ஓடினார். அவரிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து கோர்ட்டில் வழங்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்து அரசும் அவர் மீது பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
சட்ட ரீதியாக அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் விஜய் மல்லையா திவால் நோட்டீசு தொடர்பான வழக்குகளை கவனிக்கும் லண்டன் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதால் அன்றாட செலவுக்கு கூட என்னிடம் பணம் இல்லை. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடத்தி வரும் வழக்குகளுக்கு வக்கீல் பீஸ் கொடுப்பதற்கு கூட என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்தை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என விஜய் மல்லையா கேட்டுள்ளார். மேலும் அவர் மனுவில், எனது வழக்குகளை நடத்துவதற்கு மாதம் ரூ.22 லட்சம் செலவாகிறது. மற்ற செலவுகளும் இருக்கின்றன. அந்த வகையில் எனக்கு ரூ.14 கோடி தேவைப்படுகிறது. எனவே முடக்கப்பட்ட சொத்தை விடுவித்து தர வேண்டும். இதன் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டு சொத்தை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இந்த மனுவை விஜய் மல்லையாவின் வக்கீல் பிலிப் மார்ஷல் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், விஜய் மல்லையா வழக்குகளுக்காக வாதாடி வரும் எனக்கு கூட பல மாதங்களாக பீஸ் தரவில்லை. எனவே நான் அவருடைய வழக்குகளில் இருந்து விலகப் போகிறேன். உடனடியாக சொத்தை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.