- வீடு›
- செய்திகள்›
- உத்தர பிரதேசத்தில் எட்டு போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விகாஸ் துபேயின் கூட்டாளி கைது
உத்தர பிரதேசத்தில் எட்டு போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விகாஸ் துபேயின் கூட்டாளி கைது
By: Karunakaran Sun, 05 July 2020 2:56:06 PM
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற பிரபல ரவுடி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடியை போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசார் வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேயுக்கு தெரிந்துள்ளதால், கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசாரை தாக்க திட்டம் தீட்டினான். அதன்படி, போலீசார் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் அவர்களை ஒரு இடத்தில் தடுக்க ஜேசிபி-களை சாலையின் குறுக்கே நிறுத்தினான். பின்னர் அங்கு வந்த போலீசார் ஜேசிபி குறுக்கே நிறுத்தப்பட்டதால் வாகனத்தில் இருந்து இறங்கியபோது, போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டு தாக்கினர்.
பின்னர் இதனை சுதாரித்து கொண்ட போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருப்பினும் இந்த தாக்குதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கான்பூரை சுற்றியுள்ள மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தபோது, கல்யான்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருந்த விகாஸ் துபேயின் கூட்டாளி தயா சங்கர் அக்னிஹோத்ரியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.