- வீடு›
- செய்திகள்›
- ஹத்ராஸ் பெண் பாலியல் கொலை வழக்கில் சாட்சியாக இருக்கும் விக்ரமிடம் சிபிஐ தீவிர விசாரணை
ஹத்ராஸ் பெண் பாலியல் கொலை வழக்கில் சாட்சியாக இருக்கும் விக்ரமிடம் சிபிஐ தீவிர விசாரணை
By: Karunakaran Mon, 19 Oct 2020 3:53:22 PM
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19 வயது பெண், உயர்வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பின் அவர்களால் அந்த பெண் கடுமையாக தாக்கப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் 15 பேர் கொண்ட சிபிஐ குழு, ஹத்ராஸ் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பவம் நடந்த வயல்வெளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவம் நடந்த செப்டம்பர் 14ம் தேதி அந்த பகுதிக்கு முதலில் சென்று பார்த்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, பெண்ணின் அருகில் அவரது தாயாரும் சகோதரரும் நின்றிருந்ததாக முக்கிய சாட்சியான விக்ரம் கூறியுள்ளார்.
தற்போது முக்கிய சாட்சியான விக்ரமிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.