அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பயன்படுத்தியதாக வைரலாகும் தகவல்
By: Karunakaran Mon, 12 Oct 2020 3:23:32 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப்பிற்கு அக்டோபர் 2 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் இருவருக்கும் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது, அதிபர் டிரம்ப் தனக்கு ஏற்பட்ட தொற்றை சரிசெய்ய ரஷ்ய தடுப்பு மருந்தை பயன்படுத்தியதாக அவரே பதிவிட்ட ட்விட் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், இன்று காலை நான் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டேன். இதை உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன். இது மிகவும் பாதுகாப்பானது. இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்கையில், வைரலாகும் ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட் போலி என தெரியவந்துள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகளில் வைரல் பதிவு போன்று எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதன்படி, டொனால்டு டிரம்ப் ரஷ்ய தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதாக வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள். இதனால் பல்வேறு விபரீத விளைவுகளும் ஏற்படலாம்.