2020 ஆண்டு இறுதியில் உலகில் பேராபத்து நிகழ இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரல்
By: Karunakaran Thu, 27 Aug 2020 2:23:03 PM
2020 ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு தீவிரம், உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலநடுக்கம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது, உலகில் புதிதாக மற்றொரு பேராபத்து ஏற்பட இருப்பதாக கூறும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில், 2020 ஆண்டு இறுதியில் உலகம் மற்றொரு பேராபத்தை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆபத்து அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் தினத்திற்கு முந்தைய நாள் ஏற்பட இருப்பதாகவும், மேலும் பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், இது பூமியை நெருங்கினால் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதில், 2020 பெரிய பாதிப்புடன் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ததில் நவம்பர் 2 ஆம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வர இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இது பூமியில் இருந்து 2,60,000 மைல் தூரத்திலேயே இருக்கும். இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட 0.41 சதவீத வாய்ப்பே உள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்களில் பூமியை நோக்கி வரவிருக்கும் சிறுகோள் அளவில் 6.5 அடி நீளமாக இருக்கும் என கூறியுள்ளது.
மேலும், ஒருவேளை சிறுகோள் பூமிக்குள் நுழைய முற்பட்டால் சிறுகோளின் அளவு காரணமாக அது எரிந்துவிடும் என நாசா கூறியுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் பூமிக்கு பேராபத்து ஏற்பட போவதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.