மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்களை பார்க்க தடை
By: Nagaraj Thu, 26 Jan 2023 06:56:28 AM
சென்னை: நினைவிடங்களை பார்க்கத் தடை... சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு இன்று முற்பகல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.
தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் விழா நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே சென்னை காமராஜர் சிலை உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினவிழா நடைபெறும் காமராஜர் சாலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் இன்று (26ம் தேதி) முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.