தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவு நீர்
By: Nagaraj Tue, 04 July 2023 11:15:54 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் காட்சி அளிக்கும் கழிவு நீரை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீர் ஓட வழியில்லாததால் சாலையிலே குளம் போல் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தென்காசி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சென்று வருகிறது.
மேலும் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிகள் பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் பாதையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும் அங்கு சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்து செய்கின்றனர்.
இதனால் அந்த பகுதி சீர்கேடாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீரை சரி செய்து சிறுநீர் கழிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.