போரின் போதும் வேலைக்கு செல்லும் உக்ரைன் மக்கள்
By: Nagaraj Sun, 05 June 2022 08:44:23 AM
உக்ரைன்: தொடர்ந்து தீவிரம் காட்டும் படைகள்... உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீதம் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதன் காரணமாக தண்ணீரை பல கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்ய தாக்குதலால் நகரங்களுக்கு மின்சாரம், நீர் மற்றும் எரிவாயுவை
வழங்குவது தடைபட்டுள்ளன. அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் உடைந்த
நிலையில் உள்ள தண்ணீர் குழாய்களை சரிசெய்ய அனுப்பப்பட்ட பழுதுநீக்கும்
குழுவினர் வெடிகுண்டு தாக்குதலின் நடுவில் மாட்டிகொள்ள வேண்டிய சூழலில்
சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் அங்கு இக்கட்டான சூழல் நிலவுகிறது.
கிழக்கு உக்ரைனின் தொழில்துறை மையமாக திகழும் டான்பாஸின் டொனெட்ஸ்க்
பகுதியில், போரின் போது கூட, அங்குள்ள மக்கள் இன்னும் வேலைக்குச் சென்று
கொண்டிருக்கிறார்கள் என பழுதுபார்க்கும் குழுவை சேர்ந்த நபர் ஒருவர் சற்றே
ஆச்சரியத்துடன் கூறினார். இன்றைய நிலவரப்படி, நகரின் பாதி பகுதி
தண்ணீரின்றி உள்ளது.
நகரின் மற்ற பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில்
இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால்,
மோட்டார்களை கொண்டு கிணறுகளில் இருந்து தண்ணீரை வெளியே பம்ப் செய்து கொண்டு
வருவதில் சிரமம் உள்ளது. மறுபுறம், ரஷிய படைகளின் தீவிர தாக்குதலால், அணை
வெடிவைத்து தகர்க்கப்பட்டதில், அதில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகி
கால்வாய்கள் வற்றியுள்ளன.
அங்குள்ள மக்கள் தெருக்களிலும், பொது
இடங்களிலும் செங்கல் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு அடுப்பு மூட்டி உணவை
தயாரித்துவரும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.